பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு, இனி சணல் பைகளில் வழங்க திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்துடன், ரூ.2-க்கு பிளாஸ்டிக் பைகள் வழங்கப்பட்டு வருகின்றனது. இந்நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது நடவடிக்கை எடுத்துவருகின்றது.
ஏழுமலையான் கோயிலில் நாளொன்றுக்கு சராசரியாக 4 லட்சம் லட்டுக்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், அதற்கு சுமார் 70 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுப்பதற்காக 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய அலுமினியம் ஃபாயில் உடன் கூடிய சணல் பைகளில், இனி லட்டு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதற்காக திருப்பதி தேவஸ்தானம், ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனம் மற்றும் ஜூட் இந்தியா கார்ப்போரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.