பத்தணம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல சீசன் தொடங்கியுள்ள நிலையில் உணவுப் பொருட்களுக்கான அதிகாரப்பூர்வ விலை பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனை முன்னிட்டு நிலக்கல், பம்பா, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் அதிகமாக கூடுகின்றனர். இந்நிலையில், இவ்விடங்களில் உள்ள உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் தான் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிலக்கல், சன்னிதானம், பம்பா ஆகிய பகுதியில் உள்ள உணவகங்களில் (சைவ உணவுகளுக்கான) விலைப் பட்டியலை நிர்ணயம் செய்து மாவட்ட ஆட்சியர் நூகு வெளியிட்டுள்ளார்.
சன்னிதானம் பகுதியில் காபி, டீ போன்ற பாணங்கள் ரூ.11-க்கும், பம்பா, நிலக்கல் பகுதியில் ரூ10-க்கும் விற்கப்படுகிறது. பருப்பு வடை, உளுந்துவடை மற்றும் போண்டா ரூ.10-க்கும், ஆப்பம், இடியாப்பம் ரூ.9-க்கும், உப்புமா ரூ.22-க்கும், கீ ரைஸ் ரூ.45-க்கும், சாப்பாடு ரூ.60-க்கும், பாயசம் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உணவகங்களில் தயாரித்து விற்கப்படும் உணவின் தரத்தை அறிய உணவு பொது வழங்கல் துறை, குழுக்களை நியமித்துள்ளது. மேலும், உணவுப் பொருட்களுக்கு அதிக விலை விற்பணை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைக்கும் அளவிற்கும் இடையில் ஏதேனும் பொருந்தாத தன்மையை இருப்பின் அதை அறியவும் தனிக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.