சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு இன்று பிற்பகல் முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மாதந்தோறும் பௌா்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாள்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், பிரதோஷம், அமாவாசையைத் தொடர்ந்து மலைக்கோயிலுக்குச் செல்ல ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மழைக் காரணமாகவும், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்ததால், சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 3வது நாளாக இன்றும் வனத்துறை தடை விதித்தது.
ஓடைகளில் ஓடும் நீர் இன்று பிற்பகல் முதல் சீரானதால் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் காத்திருந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் மலையேறத் தொடங்கினர்.