திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் உள்ளிட்ட பெருமாள்கள் கடலில் தீர்த்தவாரி 

பவழக்கால் சப்பரத்தில் வீற்றிருந்தவாறு திரளான பக்தர்கள் சூழ கடலில் தீர்த்தவாரிக்கு இறக்கிய ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள்
திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் உள்ளிட்ட பெருமாள்கள் கடலில் தீர்த்தவாரி 

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாசி மகத்தையொட்டி திருக்கண்ணபுரம் ஸ்ரீ  சௌரிராஜப் பெருமாள் உள்ளிட்ட  பல்வேறு ஊர் கோயில்களின் பெருமாள் பக்தர்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி  திங்கள்கிழமை நடைபெற்றது. கடற்கரையில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள்  திரண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

மாசி மாதத்தில் நடத்தப்படும் மாசி மகத்தையொட்டி சிவதலங்களிலும், வைணவத் தலங்களிலும் பிரமோத்ஸவம், மாசி மகோத்ஸசவம் என்ற பெயரில் விழாவாக  நடத்தப்படுகிறது. திவ்யதேசங்களில் ஒன்றாக நாகை மாவட்டம், திருக்கண்ணபுரத்தில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள், காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு  பௌர்ணமி நாளில் எழுந்தருளி தீர்த்தவாரி செய்வது மிகுந்த சிறப்பை பெற்ற விழாவாகப் பல்லாண்டுகளாக  நடந்துவருகிறது.

இதையொட்டி ஸ்ரீ சௌரிராஜப் பெருமாளும், திருமருகல் ஸ்ரீ வரதராஜப் பெருமாளும் தனித்தனி பல்லக்கில்  திருமலைராயன்பட்டினம் வெள்ளை மண்டபத்திற்கு திங்கள்கிழமை பகல் 12  மணியளவில் எழுந்தருளின. இங்கு ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீற்றிருக்கும் வகையில் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கிட்டு பெருமாளை வழிபட்டனர்.

பிற்பகல் பவழக்கால் சப்பரத்தில் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு வெள்ளை மண்டபத்திலிருந்து  புறப்பாடானது. இவரைத் தொடர்ந்து திருமருகல் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ வீழிவரதராஜப் பெருமாள், ஸ்ரீ ரெகுநாதப் பெருமாள், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், நிரவியில் உள்ள ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள், காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள், கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமப் பெருமாள் ஆகிய 8 பெருமாள்களும் பட்டினச்சேரி கிராமம்  வழியே கடற்கரைக்குச் சென்று சமுத்திர தீர்த்தவாரி செய்தன.

கடற்கரையில் பெருமாள்களுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். 8 பெருமாள்கள் ஒருங்கிணைந்து சமுத்திர தீர்த்தவாரியில் ஈடுபடுவதைக் காண பல்வேறு ஊர்களிலிருந்தும் பக்தர்கள் திருமலைராயன்பட்டினம் வந்திருந்தனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com