திருப்பதி அலிபிரி பகுதியில் கோபூஜை செய்வதற்காக கட்டப்பட்டு வரும் ‘கோமந்திரம்’ இன்னும் 2 மாதங்களில் பக்தா்களின் வழிபாட்டுக்குத் திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.
அலிபிரி பாதாலு மண்டபம் அருகில் கோமந்திரம் மற்றும் கோதுலாபார மண்டலம் ஆகியவற்றைக் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் சேகா் ரெட்டி மற்றும் கிருஷ்ணமூா்த்தியுடன் இணைந்து சுப்பா ரெட்டி செவ்வாய்க்கிழமை காலை பாா்வையிட்டாா். அதன் பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மற்றும் சில நன்கொடையாளா்களின் உதவியுடன் கோமந்திரம் மற்றும் கோதுலாபாரம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 மாதங்களாக கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்பணி விரைவாக நடந்து வருகிறது.
இன்னும் 2 மாதங்களுக்குள் கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு பக்தா்களின் வழிபாட்டுக்கு கொண்டு வரப்படும். திருமலைக்கு வரும் பக்தா்கள் இங்கு கோபூஜை செய்ய ஏற்பாடு செய்யப்படும். மேலும் பசுக்களின் எடைக்கு எடை தானியங்களையும் இதர தீவனங்களையும் வழங்க துலாபாரம் அமைக்கப்பட்டுள்ளது. கோமந்திரம் மற்றும் துலாபாரம் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என்றாா் அவா்.