மகாளய அமாவாசையை முன்னிட்டு, திரளான பொதுமக்கள் தங்களது மூதாதையர்களுக்கு இன்று தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
மூதாதையர்களுக்கு விடுபட்ட திதி, தர்ப்பணங்களுக்குப் பரிகாரமாக மகாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்தால், மூதாதையர்களின் ஆத்மா சாந்தியடைந்து குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் விலகுவதற்கு ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம்.
தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக காவிரி உள்ளிட்ட நதிக்கரைகளுக்கும், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைகளுக்கும் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை என்பதால் அதிகாலை முதலே ஏராளமான மக்கள் குவிந்தனர். காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
இதே போல ராமேஸ்வரம் புண்ணிய தீர்த்தத்திலும், நதிக்கரையோரங்களிலும், ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. கோயில்களிலும் ஏராளமானோர் இன்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.