மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் அக்னிதீர்த்தக் கடலில் 50 ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் வெள்ளிக்கிழமை புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே ராமேசுவரத்தில் பக்தர்கள் குவிந்தனர். அக்னிதீர்த்தக் கடல் பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
பின்னர், அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடி திருக்கோயிலுள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடினர்.
தொடர்ந்து திருக்கோயிலில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர். அமாவாசையை முன்னிட்டு, பகல் முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திருக்கோயிலை சுற்றி நான்கு ரத வீதியில் குடிநீர், ஓய்விடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வழக்கத்தைவிட பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில் துணைக்கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.