பொன்னேரியை அடுத்த காட்டாவூர் கிராமத்தில் உள்ள அருந்தவவல்லி தாயார் சமேத சித்தகண்ணீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த இக்கோயிலின் தாயாரை இப்பகுதி மக்கள் காளியம்மன் என அழைத்து வழிபட்டு வருகின்றனர்.
மராட்டிய மாமன்னராக இருந்த சத்ரபதி சிவாஜி இக்கோயிலில் உள்ள காளியம்மனை பலமுறை வந்து வழிபட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், ஒரு கோடி ரூபாய் செலவில் சித்தகண்ணீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றது. இதையடுத்து வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றன.
இந்நிலையில், புதன்கிழமை கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினர். இதில், காட்டாவூர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.