திருப்பதி கோதண்டராம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி வலம் வந்தார்.
திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் சனிக்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சின்னசேஷ வாகனத்தில் கோதண்டராமர் கையில் வில் ஏந்தி மாடவீதியில் வலம் வந்தார்.
மாடவீதியில் பவனி வந்த களைப்பை போக்க காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை கோயில் வளாகத்தில் ஊஞ்சல் சேவையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை அன்னப்பறவை வாகன சேவையும் நடைபெற்றது. இதில் திருமலை ஜீயர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக கோயிலில் அமர்ந்து ஸ்ரீராமஜெயம் எழுதும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கப்பட்டது. பிரம்மோற்சவ சமயத்தில் கோடிமுறை ஸ்ரீராமஜெயம் எழுதி, அதை ராமருக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் கோயிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்காக கோயில் வளாகத்தில் பலகைகள், பேனா, பேப்பர் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதில் பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீராமஜெயம் எழுதி வருகின்றனர்.