திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் நடைபெறும் பிரம்மோத்ஸவத்தையொட்டி, ஸ்ரீ செண்பக தியாகராஜர் வசந்த மண்டபத்திலிருந்து உன்மத்த நடனத்தில் யதாஸ்தானத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு செல்லப்பட்டார்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிரம்மோத்ஸவம் நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்ச்சிகளின் தொடக்கமாக 28-ஆம் தேதி இரவு அடியார்கள் நால்வரான திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.
உன்மத்த நடனம்: பாரம்பரிய முறைப்படி திங்கள்கிழமை இரவு தியாகராஜராட்டம் தொடங்கியது. ஸ்ரீ செண்பக தியாகராஜரும், ஸ்ரீ நீலோத்பாலாம்பாளும் யதாஸ்தானத்திலிருந்து வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினர். இரவு முழுவதும் அங்கு தங்கிய ஸ்ரீ தியாகராஜருக்கு செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. பிறகு வசந்த மண்டபத்திலிருந்து ஸ்ரீ தியாகராஜர் உன்மத்த நடனத்தில் யதாஸ்தானம் கொண்டு செல்லப்பட்டார். உன்மத்த நடனம் என்பது சுவாமியை இடது, வலது புறமாக சாய்த்து ஆடியபடி செல்வதாகும். இதற்காக பிரத்தியேக பயிற்சி பெற்றவர்கள் சுவாமியை தோளில் சுமந்து ஆடியபடி யதாஸ்தானம் சென்றடைந்தனர். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அதிகாரி எஸ்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும், ஸ்ரீ தியாகராஜர் ஆட்டத்தைக் காணும் வகையில் திரளான பக்தர்களும் கோயிலில் திரண்டிருந்தனர்.