ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் நடைபெற்று வரும் காவிரி புஷ்கர விழா திருக்கல்யாண உற்ஸவத்துடன் சனிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.
144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் காவிரி மகா புஷ்கர விழா செப்டம்பர் 12 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற்று வந்த காவிரி மகா புஷ்கர விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி வருகின்றனர். அதேபோல், அம்மாமண்டபம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யாக மண்டபத்தில் தினமும் வெவ்வேறு ஹோமங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விழாவின் 11ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை திருமணத் தடை விலக, தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ சுதர்சன நரசிம்ம இஷ்டி யாகம் நடைபெற்றது.
கடைசி நாளான சனிக்கிழமை (23 ம்தேதி) காலை 8 மணிக்கு தசாவதார இஷ்டி யாகமும், 10 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 11.30 மணிக்கு சகல கலச தீர்த்தங்களுடன் பெருமாள், தாயாருடன் காவிரிக்கு புறப்பாடும், மதியம் 12 மணிக்கு அவப்ருதங்நாதம் என்கிற புனித நீராடுதல், மாலை 6 மணிக்கு காவிரி தாய்க்கு மஹா பூரண நட்சத்திர ஹாரத்தி வழிபாடு நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆதி நாயகித் தாயார், ஆதி நாயகப் பெருமாள் திருக்கல்யாண உற்ஸவ விழா நடைபெறவுள்ளது.
விழா ஏற்பாடுகளை காவிரி மகா புஷ்கர கமிட்டி குழுவினர் செய்துள்ளனர்.