சுமங்கலி பூஜை...
செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியில் மதுரை வீரன் மற்றும் முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி தசரா திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை லட்சுமி வழிபாடு, சுமங்கலி பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி வழிபாடு என நவராத்திரி உற்சவம் 9 நாள்கள் கொண்டாடப்படுகிறது. 10-ஆம் நாள் விஜயதசமி அன்று பெரிய ரதத்தில் மகிஷாசூரமர்த்தினி அலங்கரிக்கப்பட்டு வன்னிமரம் குத்தி ஊர்வலம் நடைபெறும், விழா நாள்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு 4-ஆம் நாள் உற்சவத்தையொட்டி ஸ்ரீ லட்சுமி அலங்காரம், சுமங்கலி பூஜை நடைபெற்றது. சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், மாங்கல்ய தட்டில் வைத்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக் குழுவினர் செய்துள்ளனர்.
சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் கோயிலில்...
மாதவரத்தை அடுத்த வில்லிவாக்கம் சாலையில் உள்ள சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.
மூன்றாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த இக்கோயிலில் கடந்த 21-ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. விழாவையொட்டி, நவராத்திரி உற்சவருக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
கோயிலில் உள்ள அன்னப்பூரணி அம்மன், மீனாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன. வரும் 30-ஆம் தேதி பரிவேட்டை உற்சவம் நடைபெறுகிறது. இதில், செங்குன்றம், மாதவரம், கொளத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வரை பங்கேற்க உள்ளனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் நாராயணன், தக்கார் குமரேசன், மேலாளர் குகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
கருங்குழியில் உறியடி உற்சவம்
கருங்குழி பவழக்காரத் தெருவில் உள்ள சீதாதேவி சமேத பட்டாபிராம சுவாமி கோயிலில் 7-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜயந்தி உறியடி உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோ பூஜை, சிறப்புத் திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்றன. கோயில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்துடன் ராதா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார்.
இரவு நடைபெற்ற உறியடி உற்சவத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து உற்சவமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கருங்குழி கோகுல கிருஷ்ணன் இளைஞர் நற்பணி மன்றத்தினரும், விழாக்குழுவினரும் செய்திருந்தனர்.
வல்லம் மலைக்கோயிலில் திருவிளக்கு பூஜை
செங்கல்பட்டு வல்லம் கிராமத்தில் மலை மீதுள்ள ஸ்ரீ ஞானாம்பிகை சமேத வேதாந்தீஸ்வரர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனையும், திருவிளக்கு வழிபாடும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார மகாஆராதனை நடைபெற்றன. திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
ஞானாம்பிகைக்கும் சகஸ்ரநாம குங்குமார்ச்சனை நடைபெற்றது. இதேபோல் பெண் குழந்தைகளுக்கு கன்யா பூஜை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் எம்.செல்லப்பா குருக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.