விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் ஆடித் தேரோட்டம் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெற உள்ளது.
ஆண்டாளின் அவதார தினமான ஆடிப் பூரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர பெருவிழா நடைபெறும். நடப்பாண்டு விழாவுக்கான கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு விசேஷ அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தங்க கொடி மரத்துக்கு பாலாஜி பட்டர் தலைமையில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
12 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் ஆண்டாள், ரெங்கமன்னார் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளல், வீதி உலா மற்றும் மண்டபங்களில் வீற்றிருந்து அருள்பாலித்தல் நடைபெறும்.
ஐந்தாம் நாளான ஆக. 9-ம் தேதி (வியாழக்கிழமை) பெரியாழ்வார் மங்களாசாசனம் நடைபெறும்.
ஏழாம் நாளான ஆக. 11-ம் தேதி (சனிக்கிழமை) கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
9-ம் நாளான ஆகஸ்ட் 13-ஆம் தேதி (திங்கள்கிழமை) உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் காலை 7.20 மணிக்கு நடைபெறுகிறது.
விழா நாள்களில் பிற்பகல் முதல் இரவு வரை ஆன்மிக சொற்பொழிவுகள், பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் மு.நாகராஜன் ஆகியோர் செய்துள்ளனர்.