காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு கோயில் நிர்வாகம் தரிசன நேரங்களை மாற்றி அமைத்துள்ளது.
ஆந்திரத்தில் உள்ள இக்கோயிலில் மார்கழி மாதத்தின்போது திருவெம்பாவை பாராயணம் செய்யப்படுவதுடன் சிவனுக்கும், அம்மனுக்கும் அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வரும் 16ஆம் தேதி (ஞாயிறு) முதல் வரும் ஜனவரி 16ஆம் தேதி (புதன்) வரை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மார்கழி மாத வழிபாடு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோயிலில் தரிசன நேரங்கள், கோயில் நடை திறக்கப்படும் மற்றும் சாத்தப்படும் நேரங்களை நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது. மார்கழி மாதம் முடியும் வரை இந்த நேர மாற்றம் அமலில் இருக்கும். மேலும் டிசம்பர் 16 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாற்றப்பட்ட நேர விவரம்
1. மாடவீதிகளில் ஒலிக்கப்படும் முதல் மணியோசை: அதிகாலை 3 மணி
2. மங்கல வாத்தியங்கள்: அதிகாலை 4 மணி
3. திருமஞ்சனம்: அதிகாலை 4.15 மணிமுதல்
4. கோபூஜை, சர்வ தரிசனம்: அதிகாலை 4.30 மணி முதல்
5. முதல் கால அபிஷேகம்: காலை 5 மணிக்கு
(சர்க்கார் அபிஷேகம், கோயில் அதிகாரிகளுக்கு மட்டும் அனுமதி)
6. இரண்டாம் கால அபிஷேகம்: காலை 6 மணிக்கு
(சர்க்கார் அபிஷேகம், கோயில் அதிகாரிகளுக்கு மட்டும் அனுமதி)
7. நித்திய உற்சவங்கள், மாடவீதிகளில் பஜனை: காலை 7 மணிக்கு
8. உச்சிக்கால அபிஷேகம்: காலை 10.30 மணிக்கு
(ஆர்ஜித சேவை அபிஷேகம், பக்தர்களுக்கு அனுமதி உண்டு)
9. பிரதோஷ கால அபிஷேகம்: மாலை 5 மணி முதல்
(ஆர்ஜித சேவை அபிஷேகம், பக்தர்களுக்கு அனுமதி உண்டு)
10. பள்ளியறை பூஜை: வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் உள்ளிட்ட நாள்களில் இரவு 9 மணிக்கு; செவ்வாய், புதன், வியாழன் உள்ளிட்ட நாள்களில் இரவு 8.30 மணிக்கு.