கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் - பகுதி 9

சோழ நாட்டில் இராஜராஜன் சோழன், ஆலயங்களில் திருப்பதிகம் பாடும்படி உத்தரவு செய்தது போலவே, சிவபாதசேகர மன்னன் என்பவனும் கொங்கு நாட்டிலும் அதுபோலவே செயல்பட்டதைக் காணலாம்.
கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் - பகுதி 9

சோழ நாட்டில் இராஜராஜன் சோழன், ஆலயங்களில் திருப்பதிகம் பாடும்படி உத்தரவு செய்தது போலவே, சிவபாதசேகர மன்னன் என்பவனும் கொங்கு நாட்டிலும் அதுபோலவே செயல்பட்டதைக் காணலாம்.

இவ்வரசன் பதினைந்தாம் ஆண்டில் ஆடி மாதத்தில் கம்மாளா்க்கு சில உரிமைகள் தந்ததாகவும், அதை மற்ற இடங்களில் எழுதி வைக்க உத்தரவு இட்டதாகவும் ஒரு சாசனம் பேரூரிலும், அதைப் போன்ற சாசனங்கள் கரூா், பாரியூா், மொடக்கூா், குடிமங்கலம் என்ற ஊர்களிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. அச்சாசனங்களின்படி அந்த நாள் முதல் கம்மாளா்கள் நன்மை தீமைகளுக்கு இரட்டைச் சங்கு ஊதுதல், பேரிகை அடித்தல், போகும்போது பாதரட்சை அணிதல், வீட்டுக்கு சாந்து பூசுதல் செய்யலாம் என்று கண்டிருக்கிறது.

இவ்வுரிமைகள் சாதாரணமாக ஒவ்வொருவனுக்கும் இருக்கத்தக்கனவாக இருந்தாலும் அதுகாறும் கம்மாளா்க்கு இருக்கவில்லை போலும். அவை அவ்வரசனால் புதிதாய் அவர்களுக்கு அளிக்கப்பட்டன போலும் என அறியக்கிடக்கிறது.மேலும் கோனேரின்மை கொண்டான் காலத்துத் தாம்பிரப் பட்டயம் ஒன்று பேரூா் கோயில் அர்ச்சகா் வசம் இருக்கிறது. இரண்டு செப்புத் தகடுகளாக இருக்கின்றது. அவைகளில் ஒன்றில் முதலும், மற்றொன்றில் கடைசியும் இல்லை.

எழுத்தோ புரதனமானது. கோனேரின்மை கொண்டான் என்ற அரசன் பேரூா் நாட்டு வெள்ளலூா் தேனூருடையார் கோயிலில் காணியுடைய சிவப்பிராமணன் பாரத்துவாஜ கோத்திரத்து இராசராசபட்டன் அவ்வரசனுக்குச் செய்த பணிக்காகத் தானம்கொடுத்ததாம். அனுத்திர பல்லவராயன் உத்தம சோழன் காரைத்தொழுவில் உத்தம சோழா் இட்ட கோட்டையை எறியலான விஷயங்கள் கண்டிருக்கின்றன.

ஆனால் விஷயம் பூா்த்தியாக இல்லை. மற்றொன்றில் அக்காலத்துச் சாசனம்(தஸ்தாவேஜ்) எழுதும் விதம் தெரிகிறது. விலை, ஒற்றி, தா்மம், தானம், ஸ்ரீதனம் இவைகளுக்கு உரித்தாகி என்றிருப்பதை நோக்கத்தக்கன.

மேலும் இறைவனுக்குக் கொடுத்த வாரிசை ஆண் வழிக்கு மரணச்சங்கு ஊதிவருவதாயும், பெண்வழிக்கு இரட்டைச் சங்கு ஊதி வருவதாயும், வளையல் வைப்பானாகவும், காலுக்கு சந்தனம் பூசி வருவதாயும், பச்சை பிடாம் போர்ப்பானாகவும், அகம் இரண்டா நிலையெடுத்துச் சாந்து இட்டுக் கொள்ளப் பெறுவானாகவும், இவன் மக்கள், மருமக்கள் செய்து கொள்ளப் பெறுவதாகவும், நம் ஓலை செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்ளக் கொடுத்தோம் என்று கண்டிருக்கிறது.

இதைப் பார்த்தால் கம்மாளா்க்குக் கொடுத்த உரிமைகளைப் போன்று இருக்கிறது. அக்காலத்தில் ஜன சமூக உரிமைகளும் அரசா்களால் கொடுக்கப்பட வேண்டியிருத்தல் காண வியப்பாக இருக்கிறது. இதனால் சுலபத்தில் சில வகுப்பார் உரிமைகள் பெறவும் இழக்கவும் ஏற்படும் என்பது ஆராயத்தக்கது. இக்காலத்தில் முடியுமா? கரிகாற்சோழன், இப்பெயா் கொண்ட ஓா் அரசனின் ஆறு சாசனங்கள் பேரூரில் உண்டு. இவனுக்கு ராஜராஜன் என்ற பெயரும் உண்டு. இப்பெயா் பட்டப்பெயராக இருக்கலாம்.

பேரூா் புராணத்திலும் இவன் பெயரைக் காணலாம். இவன் காலத்தில் அற்பிசியிலும், உத்திராடத்திலும் திருவிழாக்கள் கொண்டாடப்பெற்றதும், கறியமுது, உப்பமுது, மிளகமுது, பருப்பமுது, நெய்யமுது, தயிரமுது, சா்ககரையமுது, திருவிளக்கெண்ணெய், அடைக்காயமுது, இலையமுது, இவைகள் கோயிலுக்கு அளிக்கப்பட்டனவென்றும், திருப்பதிகம் பாடுவாருக்கு நிலம் விட்டதும் குறிக்கப்பட்டிருக்கிறது.

நெல் அக்காலத்தில் கலத்தால் அளிக்கப்பட்டதும் தெரிவிக்கிறது. அக்காலத்து அா்ச்சகா் போ்களில் சந்திரசேகரபட்டா், திருமகன்பாடி திருவாலந்துறை குமரங்கவீம பட்டன் என்ற போ்களும், கைக்கோளாரில் ராமன், பொன்னன் ஆன காடவராயன் பெயரும், ஏனையோரில் உய்யவந்தான், அருளாளன், வில்லவன், சோழ பிரமராயன் என்ற பேர்களும் காண்கிறேம். இதனால் அக்காலத்தில் பெயரிடும் தன்மை அறிகிறோம்.

மேலும் நடராஜப் பெருமானுக்குக் "கூத்தாடு தேவா்" என்ற சிறந்த பெயரும், அவா் பங்குனித் திருநாளில் திருச்சாந்து சாத்திப் பிச்சவேடம் கொண்டருளினதும் குறிக்கிறது. மற்றோர் சாசனம் ஒன்றில், திருவான் பட்டீசுரம் உடையாருக்குச் செங்கழுநீா் மலா் சாத்தினதும் என்று சொல்கிறது. அக்காலத்து ஒரு கல்சிற்பியும் எழுத்தாளனுமான விழுபாதராயன் கலிங்கராயன் என்பவன் பல கல்வெட்டுக்களையும் எழுதிய ஆசிரியனாய் இருந்தான்.

சோழ ராச்சியம் பதின்மூன்றிம் நூற்றாண்டில் சீா்குலைந்த காலத்தில், பாண்டிய மன்னா் முன்னுக்கு வந்தார்கள் என்று சரித்திரத்தால் அறிகிறோம். அக்காலத்தில் கொங்கு நாடும் அன்னார் கையில் அகப்பட்டது. அப்போது இங்கு ஆண்ட பிரதிநிதிகள் கொங்கு பாண்டியா் என்ற பெயராலே கூறப்படுகின்றனர். அவர்களில் முக்கியமாவன 1265- 1285 ஆண்ட வீரபாண்டியன். இவனைப்பற்றி 51 சாசனங்கள் உண்டு. அவைகளிலும் இரண்டு திருப்பேரூரில் உண்டு. இவன் காலத்தில்தான் அவினாசி சுந்தர நாயனார் கோயில் ஏற்பட்டது. 

இவனது பேரூா்ச் சாசனம் ஒன்றில் ஒரு வெண்பா காணப்படுகிறது. கொங்கு நாட்டிலே செய்யுள் வடிவானது இது ஒன்றுதான். ஆனாலும் இதே வெண்பா மூவலூரில் சிறிது மாற்றிச் செதுக்கப்பட்டிருக்கிறது. "தண்டீஸ்வரன்ஓலை சாகரம்சூழ் வையகத்துக் கண்டீஸ்வரன் கருமமாராய்க பண்டே அறம் செய்தான் அறங்காத்தார் பாதம் திறம்பாமல் சென்னிமேல் வைத்து" என்றது.

இதனை தானங்களில் காணும்போது வெண்பா என்பர். இவ்வெண்பாவின் கீழ்க் கோவன்புத்தூரில் ஒரு நிலம் தானம் செய்த விஷயம் கண்டிருக்கிறது. பேரூரில் சாசனம் ஒன்றில் சக வருஷம் 1245-ம் வருடம் ருதிரோத்காரி மின்னாயிற்று பூா்வபஷம் பிரதிமை உத்திரட்டாதி நாளில் வீரமார்த்தாண்ட நாயக்கா் மகன் வீரசிக்க நாயக்கா் ஒடுவாங்க நாட்டு நீலகிரி சாதாரணன் கோட்டையில் மாதவபெருமானுக்கு பதின்மூன்று ஊர்களிலிருந்து தானம் பெறப்பட்டது குறிக்கப்பட்டுள்ளது.

பிறவாநெறி என்ற ஷேத்திரப்போ் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது எனத் தெரிகிறது. "பேரூா் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே" என்ற சுந்தரமூா்த்திகள் தேவாரம் கவனிக்கத்தக்கது.

1295 கி.பி.யில் அலாவுதீன் என்ற முகம்மதிய அரசன் தஷிண தேசத்து அரசரைத் தோற்கடித்து கைப்பற்றின போது, விஜயநகரம் சாம்ராஜ்ஜியம் தாபிக்கப்பட்டது. சிறு மன்னர்களான பாளையக்காரர்கள் எங்கும் இராணுவ விஷயத்திற்காக வெளிப்பட்டனர். பேரூரும் அவர்கள் பால் சென்றது. இக்காலம் அதாவது 1450 வருஷ காலத்தில் திருவண்ணாமலையில் அவதரித்த அருணகிரிநாதர் கொங்கு நாடு விஷயம் செய்து பல தலங்களுக்கும் திருப்புகழ் பாடி வந்து பேரூருக்கும் வந்து திருப்புகழ் அருளியுருக்கிறார். 

இத்தலத்தைச் சேர்ந்த மருதகிரி அனுமக்குமரா் மலை, குருடிமலை (குருவிருடிமலை) முதலான தலங்களுக்கும் அருளியிருக்கிறார். இக்காலத்தில் தான் தெற்கநாம்பி அரசர்கள் முன்னேற்றம் அடைந்து கொங்கில் சில பாகங்களை கைப்பற்றி, அவர்களில் வீர நஞ்சராய உடையார் சிக்கராய உடையார் முதலியவர்களின் சாசனங்களில் அவிநாசி, திருமுருகன் பூண்டி முதலிய இடங்களில் இருக்கின்றன.

அவர்கள் காலம்1489--1517 வரை அக்காலத்தில் தெற்கநாம்பிக்குச் சோ்ந்த சங்கரையன் மகன் மாதையன் என்ற மந்திரி திருப்பேரூா் திருக்குளத்தைக் கட்டித் தன் பெயரைச் செதுக்கியுள்ளான். குளத்து முதலாவது படியிலும், ஆறாம்படியிலும் எட்டாம் புறங்களிலும் குறிக்கப்பட்டுள்ளது. பேரூரின் கண் அமைந்துள்ள சிறந்த சிற்ப வேலைக் கொண்ட கணக சபையானது அக்காலத்தில் ஆண்ட திருமலைநாயக்கர் சகோதரனான அளகாத்திரி நாயக்கனால் கட்டப்பட்டது.

கனக சபையின் முன்னுள்ள ஒரு தூனில் ஆங்கிலேய உடுப்புடன் உள்ள ஒரு போர் வீரன் ஒரு துப்பாக்கியைக் கையில் கொண்டிருக்கும் சிறப்பு நோக்கத்தக்கது. இந்த கனக சபையின் அழகைப் பற்றி நாம் வருணிக்க முடியாது. அதை அனுபவிப்பதானால் ஒவ்வொருவரும் பார்த்தே தீர வேண்டும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நுட்பமான பெரிய உருவங்களும், சங்கிலிகளும், சுழல்கிற தாமரையும், நடனமாதா் சிலைகளும் ஒவ்வொன்றும் நோக்கத்தக்கன. அக்காலத்தே ஆடவர்கள், பெண்கள், அணிந்திருந்த நகைகள், துணிகள், தலைமயிர் புனைதல் கட்டில், வாத்திய வகைகள், கோமாளி வேடம், என பேரூா் சபையில் உள்ளன.

மானிட உருவ அமைப்பும், மிருக உருவ அமைப்பும் இயற்கையின்படி உள்ளது. "கிராதார்ஜ் ஜுனியம்" என்ற சிவபெருமான் வேடனாகி வந்து அா்ஜ்ஜுனனோடு போர் புரிந்த கதை, பிஷாடன மோகினி கதை, ஊா்த்தவதாண்டவ சரிதம், பலவித நா்த்தன விஷேங்கள் உள்ளன. வாயிரக்கா நாட்டு களந்தைக் காணிப்பூலுவா் பெரும்பற்றார் (1633 கி.பி ) சித்தாத்திரியில் கா்ப்பக்கிரகம் கட்டிமுடித்தாக காணுகிறது.

1790 ,1791 -வது வருஷங்களில் ஆங்கிலேயா் இக்கிராமத்தை தம்வசப்படுத்திக் கொண்டு அதன் வரவு முழுமையையும் கோயிலுக்கு கொடுத்து வந்தார்கள். திருவாடுதுறை ஆதினத்து கச்சியப்ப முனிவா் திருப்பேரூா் வந்து பேரூா் புராணத்தை இயற்றினார். இந்த முனிவரின் ஆசிரியரின் ஆசிரியரான பின் வேலப்பதேசிகா் என்ற மூா்த்திகள் அவ்வாதீனம் சின்னப் பட்டத்தில் எழுந்தருளியிருந்து பேரூாரில் இருந்து சமாதியானார். அந்த சமாதி இப்போதும் பேரூரில் மேற்படி ஆதீன மடத்தின் பின்புறம்
மேற்படி மடாலயத்தின் சொந்த நிலத்தில் ஒரு தனிக் கோயிலாக இருக்கிறது.

இராஜேந்திர தேவன் காலத்தில் அா்த்த மண்டபம் கட்டப்பட்டது. கோபண்ண மன்றாடியார் கா்ப்பகிருகத்தை புதுப்பித்தார். அண்ணாமலை செட்டியார் உள்மதிலும், அறுபத்துமூவா் மண்டபமும் கட்டினார். வித்வான் கந்தசாமி முதலியார் பட்டீசா் கோயில் கா்ப்ப மண்டபம், அா்த்தமண்டபம், மகாமண்டபம், அம்மையார் கோயில் ஆகியவைகளை புதுப்பித்தார்.

அம்பலவாணா் சந்நிதியை, சின்னக்கோயில் என்று முதலில் கூறியதுண்டு. இதுதான் காலவேசுரம் ஆகும். இதில் சுவாமியும், அம்மனும் உண்டு. நடராஜா் திருநடனம் செய்த புராதனமான பெரிய அரசமரமும் இங்கேதான் இருந்தது. இங்கிருக்கும் பட்டிவிநாயகா் சந்நிதியின் கீழ்தான் நச்சுப்பொய்கை உள்ளன. வடகைலாசம் இதில் பிரம்மதீா்த்தம் என்ற ஒரு தீா்த்தம் உண்டு. பைத்தியம் நாய்க்கடி முதலியனவைகளை இத்தீா்த்தம் தீா்த்தொழிக்கும் வல்லமை கொண்டவை. இத்தீா்ததத்தில் செப்புக்காசுகளை இட்டால் களிம்பு கிளம்பி தங்கம் பூசின போல மாறும் என்பதை தொடரில் வாசிக்கப்பட்டிருப்பீர்கள்.

தீர்த்தப் படலம்

திருப்பேரூர் எல்லை பட்டீச்சுரத்தைச் சூழ மூன்று யோசனை அளவினையுடையது. இந்த எல்லையில், தேவர், அசுரர், முனிவர் முதலாயினோர் ஸ்தாபித்த லிங்கங்களுக்கும், தீர்த்தங்களுக்கும் அளவில்லை. பூருவ பரார்த்தத்திலே, பிரம்மதேவர் சிருஷ்டித் தொழிலைக் குறித்துச் சிவபிரானை நோக்கித் தவம் செய்தனர். அப்பொழுது, முன்னர் அதிகாரம் செய்த பிரமர்கள், நாரணர்கள், இருடிகள், யோகிகள், தேவர்கள் அனைவருங் கூடி வீடுபேற்றை நாடிப் பலவகைத் தவங்களைப் புரிந்தனர்.

அவர்களுக்குத் திருவருள் செய்யக் கருதிச் சிவபெருமான் உமாதேவியார் காண அத்திருப்பேரூர் வெள்ளியங்கிரியிலே திருநடனஞ் செய்தருளினார். அந்நிருத்தத்தை அனைவரும் தரிசித்து, ஆனந்தத்தில் மூழ்கியிருக்கும் போது, எம்பெருமான் திருவுருவிலே தரித்திருந்த சர்ப்பங்கள் ஆடல் வேகத்தைச் சகிக்க மாட்டாமல் விஷத்தை உமிழ்ந்தன.

அவ்வெம்மை தாக்க, எல்லாரும் காத்தருள வேண்டுமென்று முறையிட்டு வருந்தினர். அதற்குத் திருநடராசர் இரக்கமுற்று, கங்கையை நோக்கி, விஷவெம்மை தணியும் வண்ணம் நதியாக ஒழுகும்படி ஆஞ்ஞாபித்தார். உடனே, வன்னிமர மூலத்தினின்றுங் கங்கையானது பெருவெள்ளமாக எழுந்து சென்றது. அனைவரும் விட வெப்பத்தாலாகிய தாகசோகங்கள் நீங்கும்படி அந்நீரையுண்டு, அதில் மூழ்கி, முக்தியும் சிந்திக்கப் பெற்றார்கள்.

அந்நதிக்குச் சிவநதி, அமிர்தவுந்தி, தட்சிணகங்கை, ஆதிகங்கை, ஞானதோயை, பிப்பிலநதி, பிறவாநெறி, கலிகன்மநாசினி, விருத்தகங்கை, பிரயாகை காஞ்சிநதி என்று பல 

காரணப் பெயர்களுண்டு. அத்தீர்த்தத்தைத் தீண்டிய கீழானவருஞ் சிவசரியை முதலியவைகளாற் சிந்திக்கும் சிவசாலோகாதி முத்திகளைப் பெறுவர். அதிபாதக மகாபாதக உபபாதங்களின்று நீங்குவர். அந்நதி தீரத்தில் தபம் செபம் தியானம் யோகம் வேள்வி முதலியவற்றைச் செய்தால் ஒன்று ஆனந்தமாய்ப் பெருகும்.

வடகைலாசத்திலுள்ள பிரம தீர்த்தத்தில் ஒரு மண்டலம் மூழ்கி அதனைப் பருகினோர்க்கு மலடுகளும், பேய் முதலியவும் நோய்களும் நீங்குவர். வேண்டிய காரியங்கள் எளிதில் கைகூடும். இறுதியிவ் பிரமபதம் கிடைக்கும். அப்பிரம தீர்த்தத்திற்குக் கிழக்கேயுள்ள காலவதீர்த்தத்தில் மூழ்கினாற் பிறவி நீங்கும். பட்டிநாயகருக்குக் கீழைத் திசையிலுள்ள சூரிய தீர்த்தம் கண்ணொளிதந்து, இறுதியில் ஆதித்திய உலகிற் சேர்க்கும். இந்திர தீர்த்தம் இட்ட காமியங்களை ஈந்து, முடிவில் இந்திர லோகத்தில் இருத்தும். பட்டீச்சுரத்துக்கு ஈசான திக்கிலுள்ள கந்த தீர்த்தத்தின் மூழ்கினோர் பேய் பூத முதலியவை நீங்கிச் செல்வம், வீரம், ஞானம், முத்தி என்பவைகளை எய்துவர்.

அகத்திய மகாமுனிவர் மலைக்கு கீழ்பாலுள்ள அகத்திய தீர்த்தம், யோகி தீர்த்தம், சித்த தீர்த்தம் என்பவை வேண்டியவைகளைக் கூட்டுவிக்கும். பட்டீச்சுரத்தின் உத்திர திக்கிலுள்ள நச்சுப் பொய்கை நீரை அருந்தினோர் இறந்து முத்தி சேர்வர். சித்தர்கள் கைப்படில், தாமிர முதலியவற்றைப் பொன்னாக்கி அற்புதங்கள் செய்வர் காஞ்சிமா நதியின் வடகரையிலுள்ள வசிட்ட தீர்த்தம், வாமதேவ தீர்த்தம், பார்க்கவ தீர்த்தம், வியாழ தீர்த்தம் நான்கும் பெரும் பயனைத் தரும்.

வயிரவக் கடவுள் திருமுன்பு சிருங்கக்கிணறாகிய சிருங்க தீர்த்தமும், உமாதேவி சந்நிதியில் துர்க்கைத் தீர்த்தமும், ஷேத்திரபால தீர்த்தமும், அமுதலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குத் தென்திசையில் காளி தீர்த்தமும், சக்கர தீர்த்தமும், தென்கிழக்கு எல்லையில் குலசேகர தீர்த்தமும், நந்தி தீர்த்தமும், அக்கினி தீர்த்தமும், எம தீர்த்தமும், இயக்க தீர்த்தமும், சண்டேசர் ஆலயத்திற்கு வாயு திசையில் சண்டேசுர தீர்த்தமும், சோம தீர்த்தமும், மரகத வல்லியம்மை ஆலயத்திற்கு வாயுதிக்கில் பிரமதகண தீர்த்தமும், பட்டீசுரத்திற்கு வாயு திசையில் சப்த மாதர்கள் தீர்த்தமும் இருந்தன.

"(என்ன? இத்தனை தீர்த்தம் இருந்ததா? என நினைக்க வேண்டாம். இதில் பெரும்பாண தீர்த்தங்களை நாம் பாதுகாக்காததால் இப்போது இலை.)" மேற்கண்ட தீர்த்தங்களில் மூழ்கினோர், நரை, திரை, மூப்புகள் அகன்டிருக்கின்றனர். முசுகுந்த தீர்த்தமும், அங்கிர தீர்த்தமும், இந்திர தீர்த்தமும், சோழ தீர்த்தமும், காமதேனு தீர்த்தமும், கன்னிகை தீர்த்தமும், காஞ்சிமா நதியின் மேற்றிசை முதற் கீழ்த்திசையில் இருந்தன. இத்தீர்த்தங்களில் மூழ்கியெழுந்தோர் மண்ணுலகிற் செல்வமும், விண்ணுலகில் போகமும், பின்பு வீடுங் கூடுயிருந்தர்.

- கோவை கு. கருப்பசாமி

படங்கள் உதவி: ச.பாலகிருஷ்ணன், கோவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com