அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை சதுரகிரிக்கு சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் சாப்டூர் ஒதுக்கு காட்டுப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன.
இக்கோயிலானது, தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து சுமார் 5.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய நாள்களில் மட்டுமே இக்கோயிலுக்குச் செல்ல வனத் துறையினர் பக்தர்களை அனுமதிக்கின்றனர். இக்கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வருகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை அமாவாசை தினத்தை முன்னிட்டு, சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் சதுரகிரிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். ஆனால், தாணிப்பாறை அடிவாரம் மற்றும் மலைப் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால், பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.