மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆனி மாத அமாவாசை வேள்வி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் சிலை வெள்ளிக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்கு சித்தர் பீடத்துக்கு வந்த அடிகளாருக்கு ஈரோடு மாவட்ட செவ்வாடை பக்தர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர். பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் மேளதாளம் முழங்க, தங்க ரதம் சித்தர் பீடத்தை வலம் வந்தது. மாலை 4 மணிக்கு ஆனி மாத அமாவாசையையொட்டி, சித்தர் பீட வளாகத்தின் ஓம்சக்தி பீடம் அருகே அமைக்கப்பட்ட பிரதான சதுர வடிவ யாக குண்டத்தில் அடிகளார் கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகித்தார். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.