திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இம்மாதம் 27-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி, பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா. பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இம்மாதம் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.50 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
இதையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை, 5 மணிக்கு தங்கரதம் புறப்பாடு, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று, இரவு 8 மணிக்கு நடை திருக்காப்பிடப்படும்.
இரவு 10 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு, 10.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையாகி, 10.50 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி, நடைதிருக்காப்பிடப்படும்.
சனிக்கிழமை (ஜூலை 28) வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும் என்றார் அவர்.