விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 30-ம் தேதி நடைபெறுகிறது.
பகவான் ஸ்ரீவடபத்ரசாயி என்கிற திருநாமத்துடன் சயனத் திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ள திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்ய தேசம்.
இத்தலத்தில் ஸ்ரீபெரியாழ்வாரின் மகளாய் ஸ்ரீஆண்டாள் அவதரித்தார். திருப்பாவை என்னும் பாமாலையும், பூமாலையும் சூடிக் கொடுத்தார். ஒரு நூற்று நாற்பத்து மூன்று பாசுரங்கள் கொண்ட நாச்சியார் திருமொழியையும் அருளிச்செய்தார்.
ஸ்ரீஆண்டாளின் பக்தியைக் கண்ட திருவரங்கத்து எம்பெருமான் இத்தலத்தில் எழுந்தருளி, பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீஆண்டாளை திருமணம் செய்தார். இச் சன்னதியில் ஆண்டாள் மற்றும் கருடாழ்வாருடன், சுவாமி ஸ்ரீ ரெங்கமன்னார் என்கிற திருநாமத்தோடு திருக்கல்யாண கோலத்தில் காட்சியளிக்கிறார்.
ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இதனையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகளைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.
12 நாட்கள் நடைபெறவுள்ள உற்சவத்தில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. உற்சவ நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் புறப்பாடு நடைபெற்று மண்டபங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.