காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்தரப் பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்தர திருக்கல்யாண பெருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து, பகல், இரவு ஆகிய வேளைகளில் உற்சவர் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை பூத வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சேவை நடைபெற்றது. பின்னர் ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் பழக்கால்-சப்பரங்களிலும், விநாயகர் வெள்ளி பெருச்சாளி வாகனத்திலும், சுப்பிரமணியர் தங்கமயில் வாகனத்திலும் சின்னகாஞ்சிபுரம் காந்தி சாலையில் எழுந்தருளினர். இதனை திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதோடு, ஓதுவாமூர்த்திகள், திருமுறை இன்னிசை பாடல்களைப் பாடி வழிப்பட்டனர்.