புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்காக பக்தர்கள் பங்கேற்றனர்.
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர், இரட்டைத் திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனார், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் ஆகிய நவதிருப்பதி கோயில்களில் அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டி உள்ளிட்டவை நடைபெற்றன.
கோயில்களில் உள்ள கருடன் சன்னிதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இவ்வழிபாட்டில், கோயில் நிர்வாக அதிகாரிகள் விஸ்வநாத், கிருஷ்ணமூர்த்தி, ஆய்வாளர் ரவிசந்திரன், ஸ்ரீவைகுண்டம் கோயில் ஸ்தலத்தார்கள் சீனிவாசன், ராஜப்பா வெங்கடாச்சாரி, ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு அரசுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.