புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பாலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்றும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலை 10 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் செய்விக்கப்பட்டது.
11.00 மணியளவில் நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், 10008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
மதியம் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்கார அபிஷேகத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.