ராமானுஜருக்கு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ரூ.6.69 கோடியில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்படும் என்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பழமை வாழ்ந்த ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாகக் காட்சியளித்து வருகிறார். தற்போது ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவ விழாவும் ராமானுஜரின் 1001ஆவது அவதாரத் திருவிழாவும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ராமானுஜரின் 1000ஆவது ஆண்டு அவதாரத் திருவிழாவை முன்னிட்டு தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ராமானுஜருக்கு மணிமண்டபமும், பூங்காவும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சுமார் 2.77 சென்ட் இடத்தில் ரூ.6 கோடி மதிப்பில் அவற்றை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக பல மாதங்களுக்கு முன்பே இந்து அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக வரைபடங்கள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்றன. வரைபடம் வரைவதிலும், வரையப்பட்ட வரைபடத்திற்கு ஒப்புதல் பெறுவதிலும் ஏற்பட்ட சிக்கலால் கடந்த ஒரு வருட காலமாக மணிமண்டபம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுது.
ராமானுஜரின் 1001ஆவது ஆண்டு விழா அண்மையில் தொடங்கியுள்ள நிலையில், ராமானுஜருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணியின் மதிப்பீடு ரூ. 6 கோடியில் இருந்து ரூ 6.69 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில தினங்களில் இப்பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.