திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாள் காலை தாயார் பெரியசேஷ வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தார்.
திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்படுவது போல் திருச்சானூரில் உள்ள அவரின் பட்டத்து ராணி பத்மாவதி தாயாருக்கும் கார்த்திகை மாதம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை காலை தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
2-ஆம் நாளான புதன்கிழமை காலை பெரிய சேஷ வாகனத்தில் தாயார் மாடவீதியில் வலம் வந்தார். அதன்பின் தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மாலை 5.30 மணிக்கு 1,008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது.
இரவு 8 மணிக்கு அன்னப்பறவை வாகனத்தில் தாயார் சர்வாலங்கார பூஷிதையாக மாடவீதியில் வலம் வந்தார். இதைக் காண பக்தர்கள் திரளானோர் மாடவீதியில் திரண்டனர். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகன சேவைக்கு முன் அன்னமாச்சார்யா திட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.