ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடும் வைகுண்ட ஏகாதசி! மோட்சம் பற்றி ஜோதிடம் தரும் செய்திகள்

இன்று வைகுண்ட ஏகாதசி புண்ணிய தினமாகும். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி..
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடும் வைகுண்ட ஏகாதசி! மோட்சம் பற்றி ஜோதிடம் தரும் செய்திகள்

இன்று வைகுண்ட ஏகாதசி புண்ணிய தினமாகும். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாத ஸ்வாமி திருக்கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீ பெரும்புதூர், திருப்பதி மற்றும்  அனைத்து வைஷ்ணவ திவ்ய தேசங்களிலும் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு இன்று காலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னை பார்த்தசாரதி திருக்கோயில், திருமயிலை கேசவ பெருமாள், மாதவ பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் போன்ற வைஷ்ணவ ஸ்தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஒரு வருடத்தில் இருபத்துநான்கு அல்லது இருபத்திஐந்து ஏகாதசிகளில், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசிக்கு சிறப்பு அதிகம். மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று  அழைக்கப்படுகிறது. அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, “கீதா ஜெயந்தி’ என்று கொண்டாடுகின்றனர். இன்று ஏகாதசி விரதமிருப்பவர்கள்,  பகவான் ஸ்ரீ விஷ்ணுவைத் தரிசிப்பவர்கள், புனிதமான ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி மோக்‌ஷத்தை அடைவார்கள் என நம்பப்படுகிறது.

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன்.  இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனைத் துதித்தனர். அவர்களை  மகாவிஷ்ணுவைச் சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவைச் சரணடைந்தனர். மார்கழிமாத சுக்லபக்ஷ ஏகாதசியன்று, வைகுண்டம் சென்று நாராயணனை வணங்கி  தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைக் கூறினார்கள். 

அவர்களைக் காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார். அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, 'முரன்' பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்தச் சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள்  மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைப்பிடித்தால் அவரின்  அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

முக்கோடி தேவர்களின் துன்பத்தை பகவான் போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்தது இந்த 'ஏகாதசி திதி' ஆகும். அசுவமேத  யாகத்திற்கு நிகரான ஏகாதசி விரதத்தை நாம் கடைப்பிடித்தால், நம்முடைய சகல பாவங்ளும் நீங்கும். ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்ற வாக்கியமே ஏகாதசி விரதத்தின் மகிமையை நமக்குச்  சொல்லும்.  

சொர்க்கவாசல் தோன்றிய கதை

ஒரு சமயம் பிரளயம் ஏற்பட, அதில் மூழ்கிய பூலோகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பி, திருமால் நான்முகனைப் படைத்தார். நான்முகனை அழிக்கத் தோன்றிய மது, கைடபன் என்னும் இரண்டு அசுரர்களையும், தடுத்த திருமாலிடமே அவர்கள் சண்டைக்கு வந்ததால் திருமால் அவர்களை அழித்தார். திருமாலின் கையால் மோட்சம் பெற்ற அவர்கள் திருமாலிடம் “நாங்கள் உம் அருளால்  சித்தியடைந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்ய வேண்டும்” என்று மன்றாடினார்கள்.

அந்த வேண்டுகோளை ஏற்று திருமால் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று விண்ணகரத்தின் வடக்கு நுழைவாயிலைத் திறந்தார். அதன் வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார்.  அப்போது அந்த அசுரர்கள் “மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சுவர்க்க வாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் பின்பற்ற வேண்டும். அன்று திருக்கோவில்களில்  சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும்  பெருமாளை தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அதன்படியே நடக்கும் எனத் திருமாலும், அசுரர்களுக்கும் ஆசி  வழங்கினார். அந்த திருநாள் தான் வைகுண்ட ஏகாதசித் திருநாளாக வைணவத் திருத்தலங்களில் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

ஜோதிடத்தில் பரம பதவாசல் தரிசனம் செய்யும் அமைப்பு  யாருக்கு?

ஜோதிடத்தில் ஒன்பதாம் வீட்டை தர்மஸ்தானம் எனச் சிறப்பாக கூறப்படுகிறது. எனவே, திவ்ய க்ஷேத்திர யாத்திரை, தீர்த்த யாத்திரை போன்ற புண்ணிய காரியங்கள் செய்ய லக்கினமும் ஒன்பதாம் பாவமும்  பலமான தொடர்பில் இருக்கவேண்டும். ஜாதகத்தில் பன்னிரண்டாம் பாவத்தை அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் எனப் போற்றப்படுகிறது. கால புருஷனுக்கு தனூர் ராசி ஒன்பதாம் பாவமும் மீனம்  பன்னிரண்டாம் பாவமும் ஆகும். எனவே அதன் அதிபதியான குரு தர்ம காரியங்கள் மற்றும் தீர்த்த யாத்திரை போன்ற ஆன்மீக பயணங்களுக்கு செய்ய முக்கிய பங்கு வகிக்கிறார். ஜாதக ஒன்பதாம்  அதிபதி அல்லது கால புருஷ ஒன்பதாம் அதிபதி ஜலராசியில் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை பெரும் போது அந்த ஜாதகன் புனித பயணங்களை மேற்கொள்வான். மேலும் புனித நதியில் நீராடும் பாக்கியம்  பெறுவான்.

குரு பகவான் ஒன்பதாம் வீட்டைப் பார்த்தாலும் ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் சேர்ந்து தர்மகர்மாதிபதி யோகம் பெற்று இருந்தாலும் அந்த ஜாதகன் பல புனித பயணங்களை மேற்கொள்வான்.  ஒன்பதாம் வீட்டை குரு பகவான் பார்வை செய்தாலும் சந்திரனுக்கு ஒன்பதாம் வீட்டில் ஒரு சுப கிரகம் இருந்தாலும் அவன் பலமுறை புனித யாத்திரை செல்வான். ஒன்பதாம் அதிபதி லக்னத்தில்  அமர்ந்து குருவின் பார்வை பெற்றால் அந்த ஜாதகன் புனித நீராடுவான். சுபக்கிரகத்தின் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும் பன்னிரெண்டாம் அதிபதி மீதும் இருக்கும் போது மத ரீதியிலும் தர்ம  காரியங்களுக்காகவும் ஆன்மீக பயணங்களுக்காகவும் தனது சொத்தை செலவிடுவார்.

பன்னிரண்டாம் அதிபதி சுபக்கிரகத்துடன் கூடி நின்றால் அந்த ஜாதகனை மரியாதைக்குரிய சுப செலவு செய்ய வைக்கும். ஜோதிடத்தில் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு தர்ம திரிகோணங்கள் எனப்படும்.   மேலும் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய மூன்றும் மோக்ஷ திரிகோணங்கள் எனப்படும். தர்ம திரிகோண அதிபதிகளும் மோக்ஷ திரிகோண அதிபதிகளும் பரிவர்தனை பெற்று நின்றால் அடிக்கடி  தீர்த்த யாத்திரை மற்றும் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும். மோக்ஷ திரிகோணங்களில் ஸர்ப கிரகங்கள் நின்றாலும் ஒன்பதாம் வீடு, ஒன்பதாம் வீட்டதிபதி ஸர்ப கிரகங்களின் தொடர்பு  பெற்றால் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும்.

கோசார குரு தற்போது விருச்சிக ராசியில் இருந்து மீனம், ரிஷபம் மற்றும் கடகம் ராசிகளைப் பார்க்கிறார். இதில் மீன ராசியும் கடக ராசியும் நீர் ராசியாகி அமைந்து அதுவே குருவின் ஆட்சி மற்றும உச்ச வீடாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசி/லக்னம் ஒன்றுக்கொன்று திரிகோணமாகவும் அதுவே கால புருஷனுக்கு மோக்ஷ திரிகோணமாகவும்  அமைந்திருப்பதால் இந்த மூன்று ராசி லக்னகாரர்களும் ஸ்ரீரங்கம் போன்ற திவ்ய க்ஷேத்திரங்களில் பரம பதவாசல் தரிசனம் செய்வார்கள். 

1.  கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளை ராசியாகவோ லக்னமாகவோ 1-5-9 அதிபதிகளாகவோ கொண்டவர்கள்

2. கால புருஷ தர்ம ஸ்தானமான தனுர் ராசி/லக்னம் மற்றும் அதன் திரிகோண ராசிகளான மேஷம் மற்றும் சிம்ம ராசியை லக்னமாகவோ ராசியாகவோ கொண்டவர்கள்

3 எந்த லக்னமாக இருந்தாலும் கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளில் 1-5-9 அதிபதிகள் நிற்க பெற்றவர்கள்.

4. எந்த ராசி/லக்னமாக இருந்தாலும் தர்ம கர்மாதி யோகம் பெற்று கோச்சார குரு ஜாதக தர்ம கர்மாதிபதிகளை பார்க்கப்பெற்றவர்கள்.

ஜோதிடத்தில் 12ம் வீடு என்பது மோக்ஷத்தை தெரிவிக்கும் வீடு. அது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும் போலிருக்கிறது. நீங்களே பாருங்களேன்! ஆங்கில வருஷம் 2018-க்கு மோக்ஷம்  அளிக்கப்போவது 12-ம் மாதமான டிசம்பர் தானே! மேலும் கால புருஷ ராசியில் ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் வீடுகளுக்கு அதிபதி குரு பகவான் என்பதால் பன்னிரண்டுடன் ஒன்பதும் சேர்ந்துவிட்டால் நல்ல வழியில் மோக்ஷம் கிடைக்கும். அந்த வகையில் ஆங்கில மாதம் பன்னிரண்டாம் மாதமும் தமிழ் மாதத்தின் ஒன்பதாம் மாதமும் இனைந்த காலத்தில் வைகுண்ட ஏகாதசி வருவது கூட பொருத்தம் தான்! மேலும் கடும் மழைக்கு மோக்ஷமளித்து பனிக்காலம் பிறக்கப்போவதும் இந்த மார்கழி மாதம்தான். சரத் ருது முடிந்து ஹேமந்த ருது பிறப்பதும் இந்த மார்கழியில் தான்! தேவர்களின் இரவு பொழுதான தக்ஷிணாயன புண்ணிய காலம் முடிவடைவதும் இந்த மார்கழியில் தான். அதை உறுதி செய்யும் விதமாக மார்கழி மாதம் பிறந்து மூன்று நாட்களில் மோக்ஷம் தரும் வைகுண்ட ஏகாதசி வருகிறது.

ஏகாதசி விரதமும் விஷ்ணு சஹஸர நாம பாராயணமும்

பெரும்பாலான ஆஸ்தீக பக்தர்கள் பெரிதும் போற்றிப் படிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது. பூஜையே செய்யாமல் ஒரு இடத்தில்  அமைதியாக அமர்ந்து கொண்டு அதை தினமும் ஸ்தோத்திரம் செய்வதின் மூலம் அவரை தினமும் ஆயிரம் முறை பூஜித்தற்கான பலனைத் தரும் என்பார்கள். சஹஸ்ர என்றால் ஆயிரம் என்று அர்த்தம்.  ஆகவேதான் ஆயிரம் நாமங்களைக் கொண்ட இதன் பெயர் சஹஸ்ரநாமம் என்றாயிற்று.

இந்த நாமாவளியே அத்தனை சக்தி வாய்ந்தது என்பதான நம்பிக்கை இன்றல்ல, பல ஆயிரம் வருடங்களாகவே இருந்துள்ளது என்பதின் காரணம் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் மகாபாரதத்துக்கும் நெருங்கிய சம்மந்தம் உள்ளது. சரியாகக் கூறினால் இந்த சஹாஸ்ரனாமத்தை சனக குமாரர்களில் ஒருவரே பிதா மகனான பீஷ்மருக்கு உபதேசித்ததாகவும், பீஷ்மர் மூலமே இது மகாபாரத யுத்த  முடிவில் அனைவருக்கும் தெரியக் காரணமாக இருந்தது என்பதுமே சரியானதாகும். ஆனால் இந்த சஹாஸ்ரநாமத்தை எழுத்து வடிவில் முதலில் படைத்தது வேத வியாசர் ஆகும். வேத வியாசரே  மகாபாரதத்தை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விசேஷமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதிதேவதையாகக் கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும். எனவே வைகுண்ட ஏகாதசி தினமான நாளை விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அந்த பரந்தாமனின் அருளைத் திருப்பாவையின் “நீங்காத செல்வம் நிறைந்தேலொ ரெம்பாவை” என்பதற்கிணங்க நீங்காத செல்வத்தை பெற்று  உன்னதமான வாழ்வைப் பெறுவோமாக!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com