பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக கூட்டம் அலைமோதியதால் சுமார் நான்கு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் முருக பக்தர்கள் மட்டுமன்றி ஐயப்ப பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் கிரிவீதி முழுக்க பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
கிரிவீதியில் ஆக்கிரமிப்பு கடைகள், வாகனங்கள் ஆக்கிரமிப்பால் மீண்டும் நெரிசல் ஏற்பட்டது. மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் படிவழிப் பாதையில் ஏராளமானோர் நடந்து சென்ற நிலையில் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் கம்பிவட வாகன(ரோப்கார்) நிலையங்களில் பயணம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அனைத்து தரிசன வரிசைகளிலும் காத்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் நான்கு மணி நேரமானது.
மலைக்கோயிலில் போதுமான சுகாதார வசதி, குடிநீர் வசதி ஆகியன கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. மேலும் இரவு தங்க ரத புறப்பாட்டை காணவும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் காத்திருந்தனர்.