திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் அமைந்துள்ள மூலவர் ஆதிபுரீஸ்வரர் கவசம் இன்று மாலை திறக்கப்படுகிறது.
சுயம்புவாக உருவானதாகக் கருதப்படும் ஆதிபுரீஸ்வரர் ஆண்டு முழுவதும் வெள்ளிக்கவசத்தால் மூடப்பட்டிருப்பார். இந்நிலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பௌர்ணமியை ஒட்டி அந்த வெள்ளிக்கவசம் மூன்று நாள்களுக்கு மட்டும் திறந்து வைக்கப்படும்.
அதன்படி வியாழக்கிழமை (நவம்பர் 22) மாலை திறக்கப்படுகிறது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் மூலவரின் விசுவரூபத்தை தரிசிக்கலாம். வரும் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் நடைபெறும் சிறப்பு பூஜைக்குப் பிறகு கவசம் மீண்டும் பொருத்தப்படும்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செயல் அலுவலர் கே.சித்ராதேவி தலைமையில் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.