சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி வலம்

திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2ஆம் நாள் காலையில் மலையப்ப சுவாமி ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் சின்ன சேஷ வாகனத்தில்
பிரம்மோற்சவத்தின் 2ஆம் நாள் காலையில் சின்ன சேஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்த மலையப்ப சுவாமி.
பிரம்மோற்சவத்தின் 2ஆம் நாள் காலையில் சின்ன சேஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்த மலையப்ப சுவாமி.


திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2ஆம் நாள் காலையில் மலையப்ப சுவாமி ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் சின்ன சேஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.
திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின்போது பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி புதன்கிழமை இவ்விழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. 
அதன் 2ஆம் நாள் (வியாழக்கிழமை) காலையில் மலையப்ப சுவாமி ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் கையில் புல்லாங்குழலுடன் சின்ன சேஷ வாகனமான வாசுகியின் மீது மாடவீதியில் வலம் வந்தார். 
அதன்பின் மலையப்ப சுவாமி மாடவீதியில் பவனி வந்த களைப்பைப் போக்க அவருக்கு பல்வேறு அபிஷேகப் பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. அபிஷேகப் பொருள்களை திருமலை ஜீயர்கள் எடுத்துத்தர அர்ச்சகர்கள் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகத்தை நடத்தினர். 
அதன் பின் உற்சவர்களுக்கு நிவேதனம் சமர்ப்பித்து அவர்களுக்கு அலங்காரம் நடைபெற்றது. 
மலையப்ப சுவாமி மாலை 5 மணிக்கு சகஸ்ர தீபாலங்கார மண்டபத்தில் 1008 விளக்குகளுக்கு இடையில் ஊஞ்சல் சேவை கண்டருளினார். அப்போது இசைக் கலைஞர்கள் பக்திப் பாடல்களையும், அன்னமாச்சாரியார் கீர்த்தனைகளையும் பாடினர். அதன்பின் இரவு 8 மணிக்கு அன்னப்பறவை வாகனச் சேவை நடைபெற்றது. பாலையும், நீரையும் கலந்து வைத்தாலும் நீரிலிருந்து பாலைப் பிரித்து பருகும் தன்மை கொண்டதாக அன்னப்பறவை கருதப்படுகிறது. 
அதேபோல் பக்தர்களும் தங்கள் வாழ்நாளில் இன்பம், துன்பம் என்ற இரண்டையும் எதிர்கொள்ளும்போது துன்பத்தில் இருந்து இன்பத்தை இனம்கண்டு பிரித்து அதை அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்த்த எம்பெருமான் அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருள்வது வழக்கம். இந்த வாகனச் சேவையில் வெள்ளைப் பட்டுடுதி, கையில் வீணையுடன், சரஸ்வதி தேவி அலங்காரத்தில் வலம் வந்த பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர்.
வாகனச் சேவையின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமானுக்கு பழங்களை நிவேதனம் செய்து கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர். இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வாகனச் சேவைகளின்போது சின்ன சேஷ வாகனம் மற்றும் அன்னப்பறவை வாகனத்தின் படம் அச்சிடப்பட்ட அஞ்சல் உறைகளை அதிகாரிகள் வெளியிட்டனர். 
வாகனச் சேவைக்கு முன்னால், நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடியபடி திருமலை ஜீயர் குழுவினர் செல்ல, வாகனச் சேவைக்கு பின்னால் நாடெங்கிலுமிருந்து வந்த கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com