தாமிரவருணி மகா புஷ்கரத்தின் இரண்டாம் நாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 144 ஆண்டுகளுக்குப் பின் தாமிரபரணி மகா புஷ்கர விழா பாபநாசம் படித்துறையில் நேற்று கோலாகலமாக துவங்கியது.
குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு குருபகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
மகா புஷ்கரத்தின் இரண்டாம் நாளான இன்று தைப்பூச மண்டப படித்துறையில் பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். காலை 5.00 மணி முதல் சிறப்பு பூஜை, ஹோமங்கள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, வேளாக்குறிச்சி ஆதினம், செங்கோல் ஆதினம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டு புனித நீராடினர்.
இந்துக்களை ஒருங்கிணைக்கவே இது போன்ற திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. புஷ்கர திருவிழாவில் நீராடினால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.