திருமலையில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.
திருமலையில் கடந்த செப்.13-ம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.
பிரம்மோற்சவ நாள்களில் காலையும், இரவும் மலையப்ப சுவாமி ஸ்ரீ தேவி பூதேவியுடன் பலவிதமான வாகனங்களில் பலவித அவதாரங்களில் மாடவீதியில் வலம் வந்து அங்கு கூடியிருக்கும் பக்தர்களுக்குச் சேவை சாதிப்பது வழக்கம்.
அதன்படி 3-ம் நாளான இன்று காலையில் மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதியில் வலம் வந்தார். இன்று மாலை முத்துப்பந்தலில் மலையப்ப சுவாமி வலம் வர உள்ளார்.
இந்த பிரம்மோற்சவத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது