மாமல்லபும் தலசயனப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
இத்தலத்தில் அமைந்துள்ள நிலமங்கைத் தாயார் சமேத தலசயனப் பெருமாள் கோயில், நாடு முழுவதும் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் 63-ஆவது திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. இக்கோயில் நிலம் தொடர்பான பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது.
தொன்மையான இக்கோயிலில் வருடாந்திர சித்திரை பிரம்மோற்சவம் சனிக்கிழமை காலையில் தொடங்கியது. தாயார், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், கொடிமரத்தின் முன் பெருமாள் எழுந்தருள, துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கேடய உற்சவமும், இரவு மங்கள கிரி உற்சவமும் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை யாளி வாகன உற்சவம், இரவு சிம்ம வாகன உற்சவம், திங்கள்கிழமை காலை சூரியப் பிரபை உற்சவம், இரவு அனுமந்த வாகன உற்சவம், செவ்வாய்க்கிழமை காலை சேஷ வாகன உற்சவம், இரவு ஹம்ச வாகன உற்சவம், புதன்கிழமை நாச்சியார் பல்லக்கு உற்சவம், இரவு கருடசேவை, வியாழக்கிழமை காலை சூர்ணாபிஷேகம், கேடய உற்சவம், இரவு யானை வாகன உற்சவமும், வெள்ளிக்கிழமை காலை தேர்த் திருவிழா ஆகியவை நடைபெற உள்ளன.
அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை (ஏப். 20) காலையில் பல்லக்கு உற்சவம், இரவு குதிரை வாகன உற்சவம், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) இரவு சந்திரப் பிரபை உற்சவம், மாலை புஷ்ப யாகம், கேடய உற்சவம் ஆகியவை நடத்தப்படும். 22-ஆம் தேதி பிரம்மோற்சவம் நிறைவடையும்.
இவ்விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சங்கர், தக்கார் மற்றும் ஆய்வாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், பட்டாச்சாரியார்கள், விழாக் குழுவினர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.