திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 5ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி, தெப்பத்தில் வலம் வந்தார்.
தேவஸ்தானம் நிர்வகிக்கும் இக்கோயிலில் மாசி மாத பௌர்ணமியையொட்டி புதன்கிழமை முதல் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் 5ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் கோயில் எதிரில் உள்ள திருக்குளத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜர் தெப்பத்தில் 7 முறை வலம் வந்தார். தெப்போற்சவத்தைக் காண பக்தர்கள் குளக்கரையில் திரண்டனர்.
குளக்கரை படியில் நின்று அவர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தனர். விழாவை முன்னிட்டு, திருக்குளம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரசார பரிஷத் மற்றும் அன்னமாச்சார்யா திட்டத்தின் கலைஞர்கள் சார்பில் ஆடல், பாடல், பஜனைகள் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.