செங்கல்பட்டை அடுத்த வெண்பாக்கம் கிராமத்தில் உள்ள யோகாம்பிகை உடனுறை குண்டலீஸ்ரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
வெண்பாக்கம் கிராமத்தில் ஏரிக்கரை அருகே அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த இக்கோயில் புனரமைப்புப் பணிகள் கடந்த 8ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. ரூ.1 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகள் முடிவடைந்த நிலையில் பிப்ரவரி 24-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த 22-ஆம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை , கணபதி ஹோமம், புண்யாஹவாசனம், நவக்கிரக ஹோமம், கோபூஜை, லஷ்மி ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை ஆகியவற்றை சிவாச்சாரியார்கள் நடத்தினர். அதன் பின், வெண்பாக்கம் பிரத்யங்கிராதேவி மடத்தின் சுவாமிகள், வேதாரண்யம் சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.