திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளான புதன்கிழமை காலை கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னார் வேடத்தில் மாடவீதியில் சுவாமி வலம் வந்தார்.
கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. புதன்கிழமை காலை நினைத்ததை கொடுக்கும் கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாருடன் கல்யாண வெங்கடேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார். அதன்பின் மதியம் உற்சவமூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தி அர்ச்சகர்கள் நைவேத்தியம் செய்தனர்.
இரவு 7 மணிக்கு உற்சவமூர்த்திகள் ஊஞ்சலில் அமர்ந்து ஊஞ்சல் சேவை சாதித்தனர். இரவு 8 மணிக்கு சர்வ பிரபஞ்சத்துக்கு ராஜாக்கள் வலம் வரும் சர்வபூபால வாகனத்தில் தாயார்கள் உடனிருக்க கல்யாண வெங்கடேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார். திரளான பக்தர்கள் உற்சவமூர்த்திகளுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர்.