ஏழுமலையான் உண்டியல் வருமானம் ஞாயிற்றுக்கிழமை ரூ.2.56 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.56 கோடி வருமானம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.12 லட்சம் நன்கொடை: ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.11 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சம் நன்கொடையாகக் கிடைத்தது.
73,288 பேர் தரிசனம்
ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 73,288 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 19,419 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி 3 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 6 மணி நேரம் ஆனது. நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணி நேரத்துக்குள் ஏழுமலையானை தரிசித்தனர்.
சோதனைச் சாவடியில் ரூ.1.76 லட்சம் வசூல்
திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியை சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 72,819 பயணிகள் கடந்தனர். 8,509 வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றன. அதன் மூலம் ரூ.1.76 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ரூ.15,150 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.