திருமலையில் அகண்டம் பகுதிக்கு அருகில் லட்டு டோக்கன் விற்ற இடைத்தரகர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமலையில் லட்டு டோக்கன் முறைகேடு அவ்வப்போது நடைபெறுவதால் அந்த டோக்கன் வழங்கப்படும் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை லட்டு டோக்கன் முறைகேட்டில் தொடர்புடைய தேவஸ்தான ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என பலரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் திங்கள்கிழமை காலை ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள அகண்டம் பகுதிக்கு அருகில் நின்று கொண்டு ரூ.20 லட்டு டோக்கன்களை அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்த இடைத்தரகர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர் ஆந்திரத்தைச் சேர்ந்த ராமாஞ்சநேய ரெட்டி என்பது தெரிய வந்தது. அவரிடம் லட்டு டோக்கன் அளித்து விற்பனை செய்ய முயன்றவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.