திருப்பதியில் பக்தர்கள் மற்றும் பயணிகளிடம் பணம், நகை கொள்ளையடித்து வந்த 9 பேர் அடங்கிய கும்பலை போலீஸார் கைது செய்தனர். அந்தக் கும்பலிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது: திருப்பதியில் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்த போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் குற்றங்களைப் புரிபவர்களைக் கண்டறிந்து பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒரு கும்பல் பக்தர்கள் போல் நடித்து சக பயணிகள் மற்றும் பக்தர்களிடமிருந்து பணம், நகை கொள்ளையடித்து வந்ததை போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கண்டறிந்தனர். அந்தக் கும்பல் தங்கியிருந்த இடத்துக்கு சென்று 5 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 9 பேரை வெள்ளிக்கிழமை காலை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 100 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம், ஒரு கார் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த பேலா(45), ரேணுகா(55), கார்த்திக்(20), சந்தோஷ்(28), வாணிஸ்ரீ(50), சவிதா(30), நாகராஜு(21), மது(20), அனூப்(24). அவர்கள் தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு திருட்டு செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலுக்கு அனுப்பப்பட்டனர்.