சாதுர்மாஸ்ய விரதானுஷ்டத்தை முன்னிட்டு, ஞானபுரி சங்கடஹர மங்களமாருதி கோயிலுக்கு ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகாசுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்கிறார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி குரு தலத்தை அடுத்துள்ள திருவோணமங்கலத்தில் ஞானபுரி என்று அழைக்கப்படும் சித்திரக்கூட ஷேக்திரம் சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. ஸ்தாபகர் ரமணி அண்ணா தலைமையில், கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கோயிலில் உள்ள 33 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில், சஞ்சீவி மூலிகைகளான இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்த "மிருத சஞ்சீவினி' தேகத்தில் புகுந்திருக்கும் ஆயுதங்களின் துகள்களை வெளியேற்றும் "விசல்ய கரணீ', விழுப்புண்களை ஆற்றி சாதாரண தேகத்தை கொண்டு வரும் "ஸாவர்ண கரணீ', உடைந்த எலும்புகளை ஒன்றுசேர்க்கும் "ஸந்தான கரணீ' ஆகியவற்றுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளது, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பு.
கோயிலில், 108 அடி உயர பஞ்சதள விமானம், ஆஞ்சநேயர் சன்னிதி முன்பு பிரமாண்டமான கர்ப்பக்கிரக அர்த்த மண்டபம், லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார், வராகமூர்த்தி, ஹயக் கிரீவர் சன்னிதிகள், 176 உயரத்தில் ஆகம சாஸ்திரப்படி சப்த (ஏழு) நிலை ராஜகோபுரம், புஷ்கரணி (குளம்), அன்னதான மண்டபம், மடப்பள்ளி உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் வித்யாபீடம் வித்யாபினவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகள் ஞானபுரி சங்கட ஹர மங்களமாருதி கோயிலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் விஜயம் செய்து, திருப்பணிகளைப் பார்வையிட்டு விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார். மேலும், மகா ஸ்வாமிகள் இந்த கோயிலில் சாதுர்மாஸ்ய விரதானுஷ்டானம் செய்யவும் அருள்புரிந்தார்.
அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) காலை 10 மணிக்கு ஞானபுரி சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர் கோயிலுக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகள் விஜயம் செய்கிறார்.
சாதுர்மாஸ்ய விரதானுஷ்டம்: தொடர்ந்து, 16-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி வரை மகா ஸ்வாமிகள் கோயிலில் எழுந்தருளி சாதுர்மாஸ்ய விரதானுஷ்டம் செய்கிறார். அப்போது பல்வேறு பூஜைகள் நடதப்பட்டு மகா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
இதை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்து மகா சுவாமிகளின் அருளைப் பெறலாம். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஸ்ரீ ஜகத்குரு சாதுர்மாஸ்ய விரத சேவா ஸமிதி நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.