விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்றிரவு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு, அதிகாலை முதலே பக்தர்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். காலையில் மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
இரவு 11.30 மணியளவில் மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தை அடைந்து, அங்குள்ள ஊஞ்சலில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து, பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மன் தாலாட்டுப் பாடலைப் பாடினர். தொடர்ந்து, மகாதீபாராதனை நடைபெற்றது. அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சைப் பழம், தேங்காயில் கற்பூரம் ஏற்றி, அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உள்பட கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் செஞ்சி டிஎஸ்பி. நீதிராஜ் தலைமையில் போலீஸார், ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டனர்.