பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தும்புரு தீர்த்தத்தில் நீராடக் குவிந்த பக்தர்கள்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சேஷாசல வனத்தில் உள்ள தும்புரு தீர்த்தத்தில் நீராட பக்தர்கள் குவிந்தனர்.
திருமலையில் அமைந்துள்ள சேஷாசல வனத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் புனித தீர்த்தங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
அவற்றில் தர்ம, ஞான, பக்தி, வைராக்கியம், முக்தி உள்ளிட்டவற்றை அளிக்கவல்ல 7 தீர்த்தங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. இந்த தீர்த்தங்களில் குறிப்பிட்ட நேரத்தில் நீராடினால் பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும்.
அவற்றில் ஒன்று தும்புரு தீர்த்தம். இது பாபவிநாசத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி வேளையில் இத்தீர்த்தத்தில் நீராடினால் பக்தர்களுக்கு முக்தி சித்திக்கும் என்று கூறப்படுகிறது.
அதனால் இத்தீர்த்தத்தில் நீராட தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலிருந்து பக்தர்கள் திரண்டு வருவர். அதன்படி புதன்கிழமை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தும்புரு தீர்த்தத்தில் நீராடக் குவிந்தனர். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இத்தீர்த்தத்திற்குச் செல்ல தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை காலை வரை பக்தர்களுக்கு அனுமதியளித்துள்ளது.
வழிநெடுகிலும் ஜெனரேட்டர்கள், சோலார் விளக்குகள், பக்தர்கள் கீழே விழாமலிருக்க கயிறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தும்புரு தீர்த்தம் ஆழம் அதிகம் என்பதால் இந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பிற்காக நீச்சல் வீரர்கள், லைப் ஜாக்கெட்டுகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.
தீர்த்தத்திற்குச் செல்வோருக்கு குடிநீர், மோர், டீ, காபி, பால், அன்னதானம், சிற்றுண்டி உள்ளிட்டவற்றை 24 மணிநேரமும் தேவஸ்தானம் வழங்கியது.