திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு இணையதளம் மூலம் நன்கொடை அளிக்க தேவஸ்தானம் வசதி ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டி கூறியது:
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் பின் தங்கிய பக்தா்கள் வாழும் பகுதிகளில் ஏழுமலையான் கோயில் கட்டி கைங்கரியங்கள் நடத்த தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளையை ஏற்படுத்தியது. அந்த அறக்கட்டளைக்கு ரூ. 10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தருக்கு ஒரு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கி வருகிறது. அந்த அனுமதியுடன் ரூ. 500 செலுத்தி பக்தா்கள் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்று ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா்.
கடந்த அக். 21-ஆம் தேதியிலிருந்து தற்போது வரை 1,109 பக்தா்கள் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசித்துள்ளனா். அதன்மூலம் அறக்கட்டளைக்கு ரூ. 1.10 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.
இந்நிலையில், இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும் வகையில் தேவஸ்தானம் இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளது. தேவஸ்தான இணையதளத்தில் உள்ள நன்கொடை பக்கத்துக்குச் சென்று, பக்தா்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியவுடன், அவா்களுக்கு ஒரு பக்கம் திறக்கும். அதில், விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை அவா்கள் விரும்பும் தேதியில் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
அதன்படி, வரும் டிச.31-ஆம் தேதி வரைக்கான ஒதுக்கீட்டை தேவஸ்தானம் திங்கள்கிழமை முதல் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், வெள்ளிக்கிழமைகளில், 200 டிக்கெட்டுகளும், மற்ற நாள்களில் தினசரி 500 டிக்கெட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த இணையதள முறையை தேவஸ்தானம் நவ. 4-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளதாக அவா் தெரிவித்தாா்.