திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
கோயிலில் பக்தர்களாலும், அர்ச்சகர்களாலும், ஊழியர்கள், அதிகாரிகளாலும் தெரிந்தும், தெரியாமலும் ஏற்பட்ட தோஷங்களைக் களையும், நித்திய கைங்கரியங்கள், நைவேத்தியங்களில் குறையிருப்பின் அதை சரிசெய்யவும் இந்த பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
அதன்படி, 3 நாள்கள் நடைபெற உள்ள பவித்ரோற்சவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை காலை கங்கணபட்டர் சீனிவாசார்யலு தலைமையில் அர்ச்சகர்கள் குழுவினர் த்வாரதோரண, த்வஜகும்ப ஆவாஹனம், சக்கராதிமண்டல பூஜை, சதுஷ்டாராதனை, அக்னி பிரதிஷ்டை உள்ளிட்டவற்றை செய்து, ஹோமம் வளர்த்து, அதன் முன் பல வண்ணப்பட்டு நூலிழைகளால் ஆன பவித்ர மாலைகளை பிரதிஷ்டை செய்தனர்.
மதியம் பத்மாவதி தாயாருக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில் ரூ. 750 செலுத்தி (3 நாள்களுக்கும்) கலந்து கொண்ட பக்தர்களுக்கு தேவஸ்தானம் 2 லட்டு, 2 வடை உள்ளிட்டவற்றை பிரசாதங்களாக வழங்கியது. இதில், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு, திருப்பாவாடை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.