மலையாள புத்தாண்டான விஷுவை வரவேற்கும் வகையில், சபரிமலையில் ஐயப்பன் கோயில் நடை புதன்கிழமை திறக்கப்பட்டது.
மேல்சாந்தி வி.என்.வாசுதேவன் நம்பூதிரி, புதன்கிழமை மாலை 5 மணிக்கு சந்நிதியை திறந்தார். அப்போது, தலைமை தந்திரி கண்டரரூ ராஜீவருவும் உடனிருந்தார்.
புதன்கிழமை சிறப்பு பூஜை எதுவும் நடைபெறவில்லை. ஹரிவராசனத்துக்கு பிறகு இரவு 10 மணிக்கு கோயில் மூடப்பட்டது. வியாழக்கிழமை காலை 5 மணிக்கு கோயில் மீண்டும் திறக்கப்படும். அன்றைய தினம் கணபதி ஹோமம் நடைபெறவுள்ளது. வியாழக்கிழமை முதல் 19ஆம் தேதி வரை அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம், உதயஸ்தமனபூஜை உள்ளிட்டவை நடைபெறவுள்ளது.
விஷு வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வரும் 19ஆம் தேதி சபரிமலை நடை சாத்தப்படுகிறது.
பிறகு மீண்டும் மே மாதம் 14ஆம் தேதி மாத பூஜைக்காக நடை திறக்கப்படும்.