ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.2.09 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி வியாழக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.09 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.13 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப் பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம், வேத பரிரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என ரூ.13 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
66,118 பேர் தரிசனம்
ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 66,118 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 20,176 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 10 அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்கள் 8 மணி நேரத்துக்குப் பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 2 மணிநேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினர்.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் 11,116 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் 3,928 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 14,949 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் 481 பக்தர்களும், கபில தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் 2,175 பக்தர்களும் வியாழக்கிழமை தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
சோதனைச் சாவடி வசூல்
அலிபிரி சோதனைச் சாவடியை புதன்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் வியாழக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 62,254 பயணிகள் கடந்துள்ளனர். 8580 வாகனங்கள் இச்சாவடியைக் கடந்து சென்றன.
அதன் மூலம் ரூ.1.71 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ரூ.7,235 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.