சித்ரா பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் இரண்டாவது நாளாக இன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. குறிப்பாக, சித்ரா பௌர்ணமி நாளில் கிரிவலம் வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக சித்ரா பௌர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவர்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி விழா வியாழக்கிழமை (ஏப்.18) மாலை 7.05 மணிக்குத் தொடங்கி, வெள்ளிக்கிழமை மாலை 5.35 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்து இருந்தது.
ஆனால், வியாழக்கிழமை காலை முதலே திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். பகல் 12 மணிக்கு கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். மாலை 7 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
தொடர்ந்து, இரண்டாவது நாளாக விடிய, விடிய வெள்ளிக்கிழமையான இன்றும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சுற்றி வருகின்றனர்.