திருமலையில் நடைபெற்று வந்த வருடாந்திர வசந்தோற்சவம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
ஏழுமலையான் கோயிலில் உற்சவர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்க கடந்த 2 நாள்களாக வசந்தோற்சவம் நடந்து வந்தது. அதன் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மதியம் கோயிலுக்குள் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத கோதண்டராமர், ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் உள்ளிட்ட உற்சவர்கள் தங்கப் பல்லக்கில் கோயில் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களை தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து அர்ச்சகர்கள் ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினர்.
வசந்தோற்சவத்தை முன்னிட்டு சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது. மாலையில் உற்சவர்கள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அத்துடன் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.