ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஒருமுறை தவறினால் அதிகபட்சமாக 3 முறை தான் இந்த பெருமாளை தரிசிக்க முடியும். அப்படிப்பட்ட அபூர்வ கடவுளான ஆதி அத்திவரதரை தரிசனம் செய்யும் வாய்ப்பு பக்தர்களுக்கு இந்தாண்டு(2019) கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஜூலை 1 முதல் 31 நாட்கள் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் இன்றுடன் 12 நாட்களாக நின்ற கோலத்திலும் அத்திவரத பெருமாள் காட்சியளித்து வருகிறார். கடந்த 42 நாட்களில் 85 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அத்திவரதரை காண இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அத்திவரதர் பெருவிழாவின் 43-வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் மற்றும் பச்சை நிற சரிகை கலந்த பட்டாடையில் ராஜ மகுடம் சூட்டி பல வண்ண மலர் மாலைகள் அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் அத்திவரதரை காண அதிகளவிலான பக்தர்கள் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 4.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பொது தரிசனத்தில் அத்திவரதரை காண 6 கி.மீ தூரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.