திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது.
திருமலையில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கோயிலில் ஏற்பட்ட தோஷங்களைக் களைய தேவஸ்தானம் பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள், அர்ச்சகர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகள், நித்திய கைங்கரியங்களில் ஏற்பட்ட குற்றம் குறைகளை நிவர்த்தி செய்ய தேவஸ்தானம் இந்த பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை முதல் ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் விமரிசையாக தொடங்கியது.
தொடர்ந்து 3 நாள்கள் நடக்க உள்ள இந்த உற்சவத்தின் முதல் நாள் காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமி சம்பங்கி பிரகாரத்தில் எழுந்தருள செய்து அவர்களுக்கு திருமஞ்சன பொருட்களால் அபிஷேகம் செய்வித்தனர்.
அதன்பின் பல வண்ண பட்டு நூல்களால் ஆன பவித்ரங்களை அவர்கள் முன் ஹோமம் வளர்த்து அர்ச்சகர்கள் பிரதிஷ்டை செய்தனர். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.