அத்திவரதர் பெருவிழாவுக்கு பேருந்துகள் மூலம் தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு வருகை தருவதாக தமிழக போக்குவரத்துத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அத்திவரதர் பெருவிழாவையொட்டி ஒலிமுகம்மது பேட்டை, பச்சையப்பன் ஆடவர் கல்லூரி, ஓரிக்கை ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையங்களை போக்குவரத்துத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
அத்திவரதர் பெருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திலிருந்து 861 முறை சென்று திரும்பும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
தற்போது மேலும் கூடுதலாக 1,261 முறை சென்று திரும்பும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருத்தணி,திருப்பதி, செங்கல்பட்டு, வேலூர், பூந்தமல்லி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தாம்பரம், திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு, ஆரணி ஆகிய பகுதிகளிலிருந்து அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு போதுமான அளவுக்கு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்களை கோயில் வரை அழைத்துச் செல்ல சிறப்பு சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்ல வெகுநேரமாகும் என்பதால் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் சிற்றுந்துகளை இயக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமும் சுமார் 70 ஆயிரம் பேர் வரை அத்திவரதரை தரிசிக்க அரசுப் பேருந்துகள் மூலமாக காஞ்சிபுரத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
பொதுமக்கள் சிரமமின்றி அத்திவரதரை தரிசிக்க போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்யுமாறு போக்குவரத்துத்துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.