திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர பவித்ரோற்வசம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது.
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. கோயிலில் ஏற்பட்ட தோஷங்களை களைய இந்த உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியை அர்ச்சகர்கள் சம்பங்கி பிரகாரத்தில் எழுந்தருளச் செய்தனர். அவர்களுக்கு பால், தயிர், தேன், பழரசம், இளநீர், மஞ்சள், சந்தனம் செஞ்சந்தனம் உள்ளிட்ட திருமஞ்சனப் பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
அதன்பின், அவர்கள் முன் ஹோமம் வளர்த்தி அர்ச்சகர்கள் மகா பூர்ணாஹுதியுடன் வருடாந்திர பவித்ரோற்சவத்தை நிறைவு செய்தனர். அதன்பின், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் வலம் வந்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு, சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.